வாழ்ந்த வீட்டையும் சொந்த பந்தங்களையும் விட்டு புகுந்த வீட்டில் அடி எடுத்து வைக்கும் புதுமணப்பெண்களை தாக்கும் மனநோய்களில் முக்கியமானது நியூரோடிக் டிஸ்ஆர்டர் எனப்படும் நரம்பு சம்பந்தப்பட்ட அச்ச பாதிப்புகள். இந்த நோய் உள்ள பெண்கள் பார்ப்பதற்கு சாதாரணமாக இருப்பார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்வார்கள். ஆனால் மனதுக்குள் அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பார்கள்.
நியூரோடிக் நோய் தாக்கியவர்கள்
- தினசரி வாழ்க்கையில் எதற்கெடுத்தாலும் அச்சப்படுவார்கள்.
- குறிப்பாக விபத்து நடந்த இடத்தை பார்க்கவோ அல்லது விபத்தில் சிக்கியவர்களின் உடலைப் பார்த்தோ மிகவும் பயப்படுவார்கள்.
- ரத்தத்தை கண்டால் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படும். இதனால் உடல்ரீதியாக மிகப் பெரிய பாதிப்பை எதிர்கொள்வார்கள்.
- அவர்களின் உடலில் வியர்வை, நடுக்கம், விரைவான இதயத்துடிப்பு ஆகியவை ஏற்படும். சிறுகுடல் பாதிக்கப்படும்.
- கொந்தளிப்பான உணர்வால் மூர்ச்சை உண்டாகும்.
- கணவரை நினைத்து கவலைப்படுவது.
- தேவையில்லாத பயம்.
இப்படி பயப்படும் பெண்கள் முதலில் வாழும் முறையை மாற்றவேண்டும். தனிமையில் இருந்தால் பயமாக இருந்தால் அதை தவிர்ப்பது நல்லது. அச்சம் தரும் சந்தர்ப்பங்களை குறைத்துக் கொள்ளவேண்டும்.
நியூரோடிக் நோய் தாக்கியவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். பயப்பட வைக்கும் சூழ்நிலையை எதிர்த்து போராடும் மனநிலையை அவர்களுக்கு உருவாக்க வேண்டும். எதற்கும் பயப்படத் தேவை இல்லை என்று அவர்கள் மனதில் பதியும் வகையில் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அச்சத்தால் உடலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிந்தால் உடனே மனநல ஆலோசகரிடம் செல்லவும்.
மனப்பான்மையை மாற்றுங்கள் எது நடந்தாலும் நன்மைக்கே என்ற மனப்பான்மையை உருவாக்க வேண்டும். எதையும் பாஸிட்டிவ்வாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும். தினமும் யோகா, தியானம், இசை ஆகியவற்றில் கவனம் செலுத்துவது நல்லது.
மனதில் அச்சம் தோன்றும்போது ஏதாவது பாடலை பாடலாம். எப்போதும் நமக்குப் பிடித்த பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தால் அச்சம் தரும் சிந்தனை குறையும். இவை அனைத்தையும் விட, குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். இதனால் மனதில் அச்சம் குறையும்.
தொடர்ந்து அச்ச உணர்வு இருந்தால் தாமதிக்காமல் உளவியல் ஆலோசகரை ஆலோசிக்கவும்.
--==--