எந்த ஒரு செயலிலும் வெற்றி பெற
வேண்டும் என்ற ஆவல் எல்லோரிடமும் உள்ளது. கடின உழைப்பின் மூலமே வெற்றியடைய
முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. வெற்றி என்றால் தோல்விகளற்ற நிலை தானா! இல்லை.
உயர்ந்த குறிக்கோள்களை முயற்சி செய்து பெறுவதே ஆகும்.
வெற்றி என்பது போரில் வெற்றி பெறுவது
தானே தவிர, ஒவ்வொரு
சண்டையிலும் அல்ல. ஒரு சிலர் என்ன நடந்தாலும் விதிப்படி நடக்கிறது என்று
எண்ணுகிறார்கள். சிலரோ எதிர்பாராத வெற்றியும் அடைகிறார்கள். ஆனால் பலர் வாழ்க்கை
முழுவதும் மகிழ்ச்சியற்றும் , துன்பத்துடனும்
தான் வாழ்கிறார்கள்.
நாம் முதுமையில் நன்றாக வாழ
வேண்டும் என்பதற்காக இளமையை இழக்கிறோம், முதுமை
வந்த பின்பு இளமையை வீணாக்கி விட்ட
துக்கத்தில் வருந்துகிறோம்.
ஒரு ஊரில் பலூன் வியாபாரி ஒருவர்
இருந்தார். அவர் திருவிழாக் காலங்களில் பல வண்ண பலூன்களை விற்பார். எப்போதெல்லாம்
அவருடைய விற்பனை குறைகிறதோ அப்போதெல்லாம் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்களை
வானில் பறக்கவிடுவார். வானில் பறக்கும் பலூன்களை பார்த்ததும் சிறுவர், சிறுமியர்கள் பலூனை வாங்க விரும்புவார்கள், விற்பனை சூடு பிடிக்கும். ஒவ்வொரு நாளும்
விற்பனை குறையும் நேரத்தில் இவ்வாறு ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்களைப்
பறக்க விட்டவாறு இருந்தார். திடீரென்று ஒரு நாள் சிறுவன் ஒருவன் பலூன்
வியாபாரி முன்வந்து அந்த கருப்பு நிற பலூனை நீங்கள் பறக்கவிட்டால் அதுவும் நீண்ட
தூரம் பறக்குமா? என்றான்
பரிதாபமாய்!... அதற்கு பலூன் வியாபாரி கனிவுடன், தம்பி பலூன் பறப்பதற்கு காரணம் அதன் நிறமல்ல, அதன் உள்ளே என்ன இருக்கிறதோ? அதுதான் அப்பலூனை மேலே பறக்கும் அளவுக்கு
உந்தித் தள்ளுகிறது, என்றார்.
இந்த தத்துவம் நம் வாழ்விற்கும்
பொருந்தும். நம்முள் எத்தகைய முயற்சி எடுக்கிறோமோ அதற்கேற்றார் போல் நாம் அதன்
உயரத்தை எட்டுவோம்.